|
இலங்கையில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பொதுநலவாய மாநாடு தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கென பிரித்தானிய பிரதமரின் ஊடகக்குழுவின் ஊடாக இலங்கை வந்துள்ள கெலும் மெக்ரே நேற்றுமாலை பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரால் நடத்தப்படவிருந்த செய்தியாளர் மாநாட்டில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து ஆவேசம் அடைந்தார். இதனால் பொதுநலவாய ஊடக மத்திய நிலையத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை பரபரப்பு நிலை காணப்பட்டது.
|
ஊடகமத்திய நிலையத்திற்கு வருகை தந்திருந்த மெக்ரே அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப்பட்டியலை பார்வையிட்டதன் பின்னர் ஊடக முகாமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு கூடிநின்ற ஊடகவியலாளர்கள் மெக்ரேயை சுற்றி வளைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்ததுடன் கேள்விக்கணைகளையும் தொடுத்தனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஊடக சுதந்திரம் முழுமையாக இருப்பதாக இலங்கையில் கூறப்படுகின்றது ஆனால் இங்கு நான் வந்தது முதல் என்பின்னால் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவருகின்றனர். ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி சனல் 4 இக்கு மறுக்கப்பட்டுள்ளது அப்படியானால் இலங்கையில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா புலிகள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தால் அது குறித்து ஆவணப்படத்தை தயாரிக்கவும் நான் தயங்க மாட்டேன். சனல்-4 என்பது எப்போதும் உண்மைகளையே வெளியிடும்." என்றார் அவர்.
|


0 Comments