இந் நிகழ்வில், பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்தினரின் ஆற்றுகையொன்றும் நடைபெற்றது.
அத்துடன், நிகழ்வுக்கு முன்னர் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் அருகிலுள்ள புலவர்மணியின் உருவச்சிலைக்கு அவரது பேரன் த.கிரிதரன், மகள் பி.சத்தியலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
1899 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டம், மண்டூரில் ஏகாம்பரப்பிள்ளை வண்ணக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். மண்டூரில் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து உயர்கல்வியினைக் கல்முனையிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று நாவலர் காவியப்பாடசலையில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். நாவலர் காவியப்பாடசாலையில் புலவர்மணி அவர்களோடு, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களும் சக மாணவராகக் கல்வி பயின்றார்.
அங்கே புலவர்மணி அவர்கள் ஏறத்தாழ நான்கு வருடங்கள் முறையாகக் கற்றுத் தமிழில் பாண்டித்தியம் அடைந்தார். அவர் காவியப்பாடசலையில் மாணாக்கராயிருந்த காலத்தில் யாழ். புனித பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பண்டிதர் மயில்வாகனனாரிடத்திலும் (சுவமி விபுலனந்தர்) ,இடையிடையே சென்று பாடங்கேட்டு வந்தார்.
1926 ஆம் ஆண்டில் திருகோணமலை இந்துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1978ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம்திகதி இறைவனடிசேர்ந்தார்.
0 Comments