Advertisement

Responsive Advertisement

நிந்தவூர் ஆர்ப்பாட்டம்; 15 பேருக்கு விளக்கமறியல்

நிந்தவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான 21 பேரில் 15 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
ஆஜர்படுத்தப்பட்ட 21 பேரில் 18ற்கும் குறைவான வயதுடைய 6 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக இந்த சந்தேகநபர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வன்முறைகளை தூண்டியமை மற்றும் அமைதியின்மையை தோற்றுவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை அடுத்து சுமார் 36 மணித்தியாலங்களுக்கு கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியை மறித்து நிந்தவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று நிந்தவூர் பகுதிக்குச் சென்றிருந்த 300 க்கும் அதிகமான பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததுடன், கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அந்த வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குழப்பம் விளைவித்தவர்கள் என கூறப்படும் சிலரின் 8 மோட்டார் சைக்கிள்களும், 20 சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் சிலர் நிந்தவூர் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றதாகவும், அவர்களில் சிலர் சிவில் உடையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதனையடுத்தே நிந்தவூரில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments