ஐங்கரநேசன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் இருந்து வேளியேற்றம், அமைச்சர்கள் பதவியேற்பையும் புறக்கணிக்க முடிவு
வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனை தமது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமை காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் சற்று முன்னர் தெரிவித்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் தமக்குரிய அமைச்சுப் பதவியினை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கவெனத் தீர்மானித்துள்ள நிலையில் தமிழரசுக்கட்சியினால் தமது கட்சிக்கென தீர்மானித்த அமைச்சுப்பதவியினை ஐங்கரநேசனுக்கு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்தது.
இதனையடுத்து ஐங்கரநேசனுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டபோதும், அவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டமை காரணமாக அவரை எங்களது கட்சியிலிருந்து விலக்கியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளோம்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னரே எமது கட்சி அமைச்சுப் பதவியினை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குவதென தீர்மானித்திருந்தது. நேற்றைய தினம் அது தொடர்பில் தமிழரசுக்கட்சி உறுதி செய்திருந்தது. இருப்பினும் நேற்றைய தினம் இரவுக்குப் பின்னர் இதில மாற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து வடமாகாண சபையின் அமைச்சரவையில் நான்கு மாவட்டங்களும் அமையும் வகையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த நான்கு மாவட்டங்களுக்கும் வழங்குவதென்ற முடிவின் அடிப்படையில் அமைச்சர் தெரிவுகள் நடைபெற்றிருந்தன.
இந்த நிலையில் தமிழரசுக்கட்சியினால் எமது கட்சிக்குரிய அமைச்சரும் தீர்மானிக்கப்பட்டுள்ளார். எனவே நாளைய தினம் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்றலையும் நாங்கள் புறக்கணிக்க இருக்கியோம் எனவும் சிவசக்திஆனந்தன் தெரிவித்தார்.
எமது கட்சியின் அறிவித்தலுக்கமைய முல்லைத்தீவுக்கு அமைச்சர் ஒருவரை நியமிக்காத பட்சத்தில் இவ்வாறான முடிவினையே நாங்கள் எடுப்போம் எனவும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.
0 Comments