மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் சடலம் 9 வருடங்களின் பின்னர் தோண்டியெடுப்பு
சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒருவரின் சடலம் ஒன்பது வருடங்களின் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சீ.மஹலேகம் தெரிவித்தார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவின் தும்பாலஞ்சோலை காட்டிலுள்ள மயானத்திலிருந்து குறித்த சடலம் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்னர் மரண விசாரணை எதுமின்றிப் புதைக்கப்பட்ட சடலமே தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
தும்பாலஞ்சோலையைச் சேர்ந்த காத்தான் என்றழைக்கப்படும் கந்தசாமி சந்திரசிறி என்பவரின் சடலமே மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம்.றியாழின் உத்தரவின்பேரில் தோண்டி எடுக்கப்பட்டது.
குடும்பஸ்தரான மேற்படி நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் மரண விசாரணை எதுவுமின்றிப் புதைக்கப்பட்டார் என்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சடலத்தைத் தோண்டி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாவட்ட நீதிபதி, கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரி எம்.எம்.எம். அப்துல் றஹுமான் ஆகியோர் முன்னிலையில் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக உறுகாமம், கித்துள் பகுதியைச் சேர்ந்த வெள்ளக்கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக உறவினர்களை நவம்பர் முதலாம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திற்கு சமுகமளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments