கல்லடி சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலைக்கு முன் இன்று காலை ஒரு சில பெற்றோர்களும் சில பழைய மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களைக் கண்டித்து ஆசிரியர்கள் கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் முன்னெடுப்பு
இன்று காலை மட்டு கல்லடி சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலை வாயில் கதவை முற்றுகையிட்டு பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் சிலர் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக கோசங்களை எழுப்பி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் இதனால் காலையிலே பாடசாலைக்கு வருகைதந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏனைய கல்விசாரா ஊழியர்களும் பாடசாலைக்கு உள் நுழைய முடியாமல் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.
ஆர்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் ஆசிரியர்கள் பாடசாலைக்குள் செல்ல எத்தணித்த வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, காரசாரமான வார்த்தை பிரயோகங்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆசிரியர்களுக்கு வசைபாடினர். ஒரு கட்டத்தில் ஆர்பாட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையில் கைகலப்பு வரை செல்லும் நிலையும் உருவானதை அவதானிக்க முடிந்தது.
இவ் ஆர்ப்பாட்டம் நடந்த வேளையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஆசிரியர்கள் சார்பாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தனிப்பட்ட முறையில் ஆசிரியை ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமைக்கு எதிராகவும், கடுமையான சொற்பிரயோகங்களால் தன்னை ஏசியதற்கு எதிராகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கல்வி அதிகாரிகளிடம் கையளித்தனர்.
இவ்வாறான பதட்டமான சூழ்நிலை பாடசாலைச் சூழலில் நிலவிக்கொண்டிருந்த சமயம் இன்று சில பெற்றோர்கள், சில பழைய மாணவர்கள்களால் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தங்களைத் தாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆசிரியர்களும் பலம்மிக்க கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை பாடசாலை முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் நாளைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியை மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா சூழ்நிலையின் பிற்பாடு நீண்ட இடைவெளிக்குப் பின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்திருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments: