மட்டக்களப்பு காத்தான்குடியில் குடும்பத்தகராறினால் ஏற்பட்ட கைகலப்பில் கடுமையாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி 2 கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்த முகம்மது முஸ்பீர்(வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டில் குடும்பத்தகராறு இடம்பெற்ற நிலையில், பின்னர் மனைவியின் சகோதரனுக்கும்,உயிரிழந்த நபருக்கும் (மச்சினன்) இடையில் தகராறு இடம்பெற்று இவரை தாக்கியதாகவும், இதனால் காயமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக இவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் மனைவியின் சகோதரனை (மச்சினன்) காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், இதனாலே குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது
0 Comments