மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம்-கிரான்குளம் எல்லைப் பகுதியில் பாவித்த மருத்துவ ஊசிகள், ஏனைய மருத்துவக் கழிவுப்பொருட்கள் வீசப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள், ஆலய நிர்வாகம் என பலரும் கவலை தெரிவிக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும், மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் கிராமத்தையும் எல்லையாக கொண்ட மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலைப் பகுதியில் பொதுமக்களுக்கு பாவித்த ஊசிகள், எனைய மருத்துவக் கழிவுப் பொருட்கள், உடைந்த போத்தல் ஓடுகள், பாவித்த பொலித்தீன் பைகள், பாவித்த பிளாஸ்ரிக் பொருட்கள், உடைந்த இலத்திரணியல் கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப்பொருட்கள் வீசப்பட்டுள்ளதால் அவ்வழியாக பயணிக்கும் பொதுமக்களும், கால்நடைகளும், பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
அருகில், பறவைகள் சரணாலயம், குளம், மற்றும் குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் என்பன அமைந்துள்ளன. இவ்வாறு கொட்டப்படும் கழிவுப்பொருட்களால் பறவைகள் சரணாலயமும், ஆலயத்தின் புனிதத்தன்மையும் பாதிக்கப்படுகின்றது. இதனால் பலரும் பலத்த அசௌரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள்.
இப்பகுதியில் பகலில் கழிவுப்பொருட்கள் வீசப்படுவதை காணமுடியாமல் உள்ளதாகவும், அதிகாலைவேளை அல்லது இரவில்தான் இவவாறு மருத்துவக் ககழிவுகளை மிகவும் சூட்சுமமான முறையில் யாரோ வீசி செல்வதாக அப்பகுதியிலுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் விளம்பரப் பதாகை இடப்பட்டுள்ள போதிலும், அதனைப் பொருட்படுத்தாத சிலரே இவ்வாறு கழிவுகளைக் கொட்டி வருகின்றனர் எனவும் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.









0 comments: