Advertisement

Responsive Advertisement

பொத்துவிலில் தனியார் வங்கிக்குப் பூட்டு; மீன் சந்தையும் ஸ்தம்பிதம் அடைந்தது

 


அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.


இதனால் குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் பி.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தனியார் வங்கி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது அங்கு பணியாற்றிவந்த மூவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வங்கியின் சகல நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது.

இதேவேளை பொத்துவில் பிரதான மீன் சந்தையின் சுகாதார நடவடிக்கைகள் குறித்து சிரேஸ்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலிக் தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த சந்தையில் சுகாதார விதிமுறைகள்முறையாகப் பின்பற்றப்படாமையால் அதிகாரிகளால் வியாபார நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கப்பட்டதோடு, அவை சீர் செய்யப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்தில் இதுவரை 708 நபர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன், தற்போது 122 பேர் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த 24 மணி நேரத்திற்குள் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1026 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments