Home » » மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!

 


மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுதந்திரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாநகர முதல்வரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (22)வியாழக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அப்படியாக இந்தப் புதிய ஆணையாளர் வந்தபோது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபைத் தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன. அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும்கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமடாட்டேன் என்றும் அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவென் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும் அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இவ்வாறு இடைக்கால தடை எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான இடைக்கால தலையீடு செய்யக் கூடாது என்றே நீதிமன்றம் இடைக்காலத் தடையத்தரவு கடந்த வழக்கில் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி ஆணையாளர் தொடர்ச்சியாக முதல்வரினால் வழங்கப்பட்ட அதிகாரத்தில் தலையீடுசெய்வதாக இன்றைய தினம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக மாநகர முதல்வரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் இரண்டாவது எதிர் மனுதாரரான உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் சார்பாக மாநகர முதல்வரால் கோரப்பட்ட மனுவில் உள்ள நிவாரணங்களை வழங்குவதில் எந்தவித ஆட்சேபனையும் தனக்கு இல்லை எனவும், தனது பெயரினை வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். எனினும் நீதிமன்றம் அவரின் பெயர் தொடர்ச்சியாக இருக்கட்டும் எனவும் அவர் சார்பாக அவரின் சட்டத்தரணி மட்டும் ஆயராகும்படி உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆணையாளரின் சட்டத்தரணி மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய சட்டத்தரணி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் போதிய கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய இந்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |