Home » » தமிழ் எம்.பிக்கள் , சில முஸ்லிம் எம்.பி களை இணைத்துக்கொண்டு, கல்முனை வடக்குத் தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கனவு கண்டால், அது பகற் கனவாகவே அமையும்

தமிழ் எம்.பிக்கள் , சில முஸ்லிம் எம்.பி களை இணைத்துக்கொண்டு, கல்முனை வடக்குத் தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கனவு கண்டால், அது பகற் கனவாகவே அமையும்


 கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இராஜதந்திரமாகக் காய் நகர்த்தவே முயற்சிக்குமெனவும் சாடினார்.


கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், “கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது தொடர்பில், 2015 முதலே, பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உறுதியாக இருக்கிறோம். இதற்காக, மட்டக்களப்பில் பல அமைதிப் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்” என்றார்.

தற்போது, இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்த அவர், அரசாங்கத்திடம் இருந்து, இது தொடர்பில் சாதகமான பதில்கள் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் உள்ள சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, கல்முனை வடக்குத் தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கனவு கண்டால், அது பகற் கனவாகவே அமையுமெனவும் தெரிவித்த அவர், இது விடயத்தில் என்னை விமர்சித்த சாணக்கியன் எம்.பி போன்றோருக்கு, காலம் பதில் சொல்லுமென்றார்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முஸ்லிம் எம்.பிக்கள் சுமூகமான உறவைக் கடைபிடிக்க விரும்பினால், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த இணக்கம் தெரிவிக்க வேண்டுமென்றும், வியாழேந்திரன் வலியுறுத்தினார்.

இதற்கு முட்டுக்கட்டையாக ஹரிஸ் போன்ற எம்.பிகள் இருக்கிறார்கள் எனவும் புவியியல் தொடர்பற்ற வகையில் கல்வி வலயமொன்று மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டது என்றும், அம்பாறைக்கென்று ஆர்.டி.எச் அலுவலகம் காணப்படுவதாகவும் இந்த விடயங்களைப் பெற்றுக்கொள்ள தமிழ் எம்.பிகள் ஒருபோதும் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு முதலே, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையான கல்முனை வடக்குக் பிரதேச செயலகத்தைத் தர முயர்த்துவதில், முஸ்லிம் காங்கிரஸே முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் நல்லிணக்கம் என்ற விடயம், பேச்சுக்கு அப்பால் செயற்பாட்டிலும் இருக்க வேண்டுமெனச் சுட்டிக்காட்டினார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |