மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அப்படியாக இந்தப் புதிய ஆணையாளர் வந்தபோது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபைத் தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன.
அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும் கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமடாட்டேன் என்றும், அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவேன் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும், அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இடைக்காலத் தடை எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நேற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த தவணை இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல்கள் பிரதிவாதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆட்சேபனை தொடர்பான விவாதத்தினையும் இடைக்கால தடையுத்தரவு விவாதத்தினையும் நீதிமன்றம் செவிமடுத்து ஜுன் மாதம் 03ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தது.
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரக் குறைப்பு விடயத்திற்கு எதிராக மாநகர ஆணையாளர் செயற்படுவதற்கு தடையாணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான இடைக்காலத் தடையுத்தரவிற்கான விசாரனை நேற்று இடம்பெற்றது.
சென்ற தவணை இந்த மனு சம்மந்தமான அறிவித்தல் இரண்டு பிரதிவாதிகளுக்கும் அனுப்பப்பட்டு இடைக்காலத் தடையுத்தரவு சம்மந்தமான விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு பிரதிவாதிகளும் மன்றிலே சமூகமாகியிருந்தார்கள். அவர்கள் சார்பில் சட்டத்தரணியொருவரும் ஆஜராகியிருந்தார்.
நேற்றைய தினம் மன்றிலே அவர்களால் பூர்வாங்க ஆட்சேபனையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மாகாண ஆளுநரைப் பிரதிவாதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்கின்ற ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டது. ஏனெனில் ஆணையாளர் ஆளுநரின் மேற்பார்வையின் கீழ் தொழில் செய்கின்ற ஒருவர் - அவரின் தொழில் சம்மந்தமான விடயங்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் செய்வதாக இருந்தால் ஆளுநர் தான் அதனைச் செய்ய வேண்டும்.
எனவே ஆளுநருக்கு அறிவிப்பதற்காகவாவது ஆளுநரும் பிரதிவாதியாகச் சேர்த்திருக்கப்படல் வேண்டும் என்கின்ற பூர்வாங்க ஆட்சேபனையொன்று முதலிலே எடுக்கப்பட்டது.
இது ஆணையாளரின் தொழில்சார் விடயங்களை நாங்கள் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இங்கு கொண்டுவரப்பட்டிருப்பது மாநகர சபையினுடைய நிறைவேற்று அதிகாரம் தொடர்பான விடயம். மாநகரசபை என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற சபை. அதற்கு எவ்வாறான அதிகாரங்கள் உண்டு என்பது சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
இந்த அதகாரங்களிலே நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றுகின்றவர் மாநகரசபையினுடைய முதல்வர்.
0 Comments