Home » » கோட்டாபயவின் ஒரு நாடு ஒரே சட்டத்தில் பண்ணையாளருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம்!

கோட்டாபயவின் ஒரு நாடு ஒரே சட்டத்தில் பண்ணையாளருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டம்!

 


ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தெரிவிக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் பெரும்பான்மையினத்திற்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில் மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில் உள்ள சுமார் 1500 காணிகள் கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதை காணமுடிந்தது.

படுவான்கரை பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது இங்குள்ள கால்நடைகள் இப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்றது.

தற்போது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது அப்பகுதியில் ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி காணிகளை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது குறித்து கால்நடை பண்ணையாளர்களினால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

நீண்டகாலமாக தாங்கள் இப்பகுதியில் கால்நடைகளை, தமது முதாதையர்கள் காலம்முதல் மேய்த்துவருவதாகவும் ஆனால் தற்போது தமது மேய்ச்சல் தரையினை சுற்றி முந்திரிகை வளர்ப்பு என கூறி வேலியமைக்கப்படுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் சிறிய மரக்குச்சு வெட்டும்போது தம்மை பொலிஸார் கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்வதாகவும் ஆனால் இங்கு பெரியளவிலான தேக்கு மரங்கள் கூட வெட்டப்படும் நிலையில் அதனை யாரும் கண்டுகொள்வதில்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படையினர் முகாம் வேலி அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் முட்கம்பிகள் கொண்டு வேலிகள் அமைக்கப்படுவதன் காரணமாக தாங்கள் மாடு மேய்க்கும்போது பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,

மேய்ச்சல் தரைகள் சேனைப்பயிர்ச் செய்கை இடங்களாக மாற்றப்படுகின்றன. இது பெரும்பான்மையினத்தின் குடியேற்றங்களாகவும் மாறிவருகின்றன. பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காத்தார்மல்லிச்சேனை பகுதிக்கு நாங்கள் வந்து இங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினோம்.

கால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாடிகளில் ஒரு தீப்பெட்டி வைத்திருக்க முடியாது, பாதுகாப்புக்காக ஒரு கத்திவைத்திருக்க முடியாது, கால்நடைகளை வைத்திருப்பவர்கள் ஒரு கம்புகூட வெட்டமுடியாத நிலையிலும் அவ்வாறு வெட்டினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு பெருமளவான பணம் தண்டப்பணமாக அறவிடப்படுகின்றது.

இந்த நிலையில் அப்பகுதியை பார்க்கும்போது மிகவும் மனவேதனையாக இருக்கின்றது. பயன்தரும் பலமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு அந்த மரங்கள் கொண்டே பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாக வரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் முட்கம்பிகளைக் கொண்டு வேலிகள் அமைக்கப்படுகின்றது. அந்தவேலியில் மாடுகள் படும்போது ஏற்படும் காயங்கள் இலகுவில்மாறாது என பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதி மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவுலானையில் இருந்து பட்டிப்பளையில் மணலேற்றம், காத்தார்சேனை, விச்சுக்குளம் உட்பட பல பகுதிகள் இதேபோன்று வவுணதீவீல் வெட்டிப்போட்டசேனை, செங்கலடியில் கார்மலை, மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகள் கபளீகரம் செய்யப்படுகின்றது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |