Home » » குழந்தைகளுக்கு வெள்ளிப் பாத்திரங்களில் உணவு கொடுத்தால் இத்தனை நன்மைகளா?

குழந்தைகளுக்கு வெள்ளிப் பாத்திரங்களில் உணவு கொடுத்தால் இத்தனை நன்மைகளா?

 


இன்றைய பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் குழந்தைக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிக் குவிக்கிறார்கள். முன்பெல்லாம் 10, 15 குழந்தைகள் இருப்பதால் இதையெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இருந்ததில்லை.

ஆனால் இப்போது “ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” என்று வைத்திருப்பதாலோ என்னவோ அவர்களுக்காக நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொருட்களில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களும் ஒன்றாகும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாலாடை முதல் உணவு கொடுக்க பயன்படுத்தும் கிண்ணம், கரண்டிகள், டம்ளர் மற்றும் குழாயில் உறிஞ்சிக் குடிக்கும் டம்ளர் என்று எல்லா வகையான பொருட்களுக்கும் வெள்ளி உலோகத்தை முதல் தேர்வாக தேர்வு செய்கின்றோம்.

வெள்ளி பொருட்களுக்கு பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன? வெள்ளிப் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதனை தெரிந்து கொண்டால் இனி நீங்களும் வெள்ளிப் பொருட்களை தவிர்க்காமல் வாங்கி விடுவீர்கள்.

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பாலாடை சில்வரை விட இரும்பில் இருப்பது நன்மை தரும். ஆனால் அதை விட வெள்ளியில் இருப்பது இன்னும் சிறப்பானது. அது போல் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட பயன்படுத்தும் கிண்ணி முதல் எடுத்து ஊட்டும் கரண்டி வரை வெள்ளியில் இருப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின் வெள்ளி பொருளாக தயாரிப்பிற்கு வரும் வெள்ளி, உடல் சூட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதில் வைக்கப்படும் உணவானது சூடாக இருக்கும் பொழுது எந்த விதமான நச்சுக்களும் உண்டாவதில்லை. மேலும் அதில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

வெள்ளியில் சூடான பொருட்களையும், குளிர்ச்சியான பொருட்களை வைக்கலாம். வெள்ளி இருவேறு வெப்ப நிலையை தாங்கும் தன்மை கொண்டுள்ளதால் சம நிலையை உருவாக்கி அதன் தன்மையில் கூடுதலாக மெருகேறுகிறது.

வெள்ளியில் சூடான பொருட்களை வைக்கும் பொழுது எதிர்ப்பு பாக்டீரியல் பண்புகள் அதிகமாகும். இதனால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மற்ற உலோகங்களைக் காட்டிலும் வெள்ளி அதிகம் விலை இருந்தாலும் இதில் இருக்கும் நன்மைகள் கருதி இதனை பெரும்பாலோனோர் பயன்படுத்துகின்றனர்.

வெள்ளி பொருட்களை வாங்கும் பொழுது கூர்மை இல்லாமல், அதிக வேலைப்பாடுகளும் இல்லாமல், எளிமையாக தேர்ந்தெடுத்து வாங்குவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வேலைப்பாடுகள் இருந்தால் அதற்கு இடையே சேரும் அழுக்குகளை எளிதாக நீக்க முடியாமல் போய்விடும். அப்படியான வெள்ளிப் பொருட்களை குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

எடை குறைவாக இருந்தாலும் வெள்ளி பொருட்கள் விரைவில் நசுங்கி விடும் ஆபத்து உள்ளது என்பதால் சற்று கனமுள்ள வெள்ளிப் பொருட்களை வாங்குவது நல்லது. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வெள்ளிப் பொருட்கள் மட்டுமல்லாமல், பூஜைக்கு பயன்படுத்தும் வெள்ளிப் பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்தும் வெள்ளி பொருட்கள் என்று எந்த வெள்ளியாக இருந்தாலும், அதனை சுலபமாக சுத்தம் செய்வதற்கு கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு சமையல் சோடா மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து ஊற வைத்து தேய்த்தால் போதும்.

புத்தம் புதியதாக வெள்ளிப் பொருட்கள் பளிச்சிடும். நாம் அன்றாட வாழ்வில் எவ்வளவோ, வீணாக செலவு செய்யும் பொழுது குழந்தைகளுக்காக வாங்கும் வெள்ளிப் பொருட்களை கணக்கு பார்த்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக குழந்தைகளுக்கு பரிசு கொடுக்க விரும்புபவர்கள் வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞாண் கயிறு என்று வாங்கிக் கொடுக்கும் பொழுது, சாப்பிட பயன்படுத்தும் கிண்ணம், கரண்டி போன்ற பொருட்களையும் வாங்கிக் கொடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தலாம்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |