யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று (8) இரவோடிரவாக பல்கலைக் கழக நிர்வாகத்தால் அரசாங்க உத்தரவுக்கு இணங்க இடித்தழிக்கப்பட்டது.
இதனையறிந்து பல்கலைக்கழக வாயிலில் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் – அரசியல்வாதிகள் இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இரவிரவாக போராட்டம் தொடர்ந்த நிலையில், தற்போது வரை அப்போராட்டம் கைவிடப்படாமல் நடைபெற்று வருகின்றது.
தற்போது பல்கலைக்கழக வாயிலில் திரண்டுள்ள போராட்டக்காரர்கள், “துணைவேந்தரே பதில் கூறு, நினைவுத் தூபியை ஏன் இடித்தாய், பதவிக்காய் காட்டிக்கொடுக்காதே, துணைவேந்தரே பதவி விலகு, மாணவர்களை விடுதலை செய்” – என கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இதேவேளை தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று சற்றுமுன் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்றிரவு பெருமளவில் ஆயுதம் தாங்கிய, கலகமடக்க தயாராக அதிரடிப் படையினர், பொலிஸார், இராணுவத்தினர் குவிந்து போராட்டக்காரர்களை சுற்றி நின்றனர். தற்பாேது அதிரடிப் படையினர் பல்கலைழக்கத்தின் உள்ளேயும் பொலிஸார் வெளியேயும் உள்ளனர்.
0 comments: