(வி.ரி.சகாதேவராஜா)கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சாரதி மற்றும் இரண்டு மருத்துவமாதுக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பணிமனை இன்று(29) வரை பூட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(26) காலை முதல் பூட்டப்பட்ட இப்பணிமனை இன்று செவ்வாய்க்கிழமை வரை பூட்டப்பட்டிருக்கும் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார சேவைப்பணிமனைகளில் ஒன்றான கல்முனை வடக்கில் இதுவரை 11 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர். சுகாதாரவைத்திய அதிகாரி டொக்டர் கே.கணேஸ்வரனின் அர்ப்பணிப்பான சேவையே அங்கு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு காரணம் எனவும் அங்கு அவரது சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி மற்றும் இரண்டு மருத்துவமாதுக்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதைத்தொடர்ந்து அங்குள்ள ஏனையோருக்கும் பரிசோதனை செய்த பின்னரே பணிமனை னை மீண்டும் திறக்கப்படும் அதுவரை பணிமனையின் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது என பணிப்பாளர் சுகுணன் மேலும் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்தியத்தில் நேற்றுவரை 728 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 5 பேர் மரணித்துள்ளனர். கொரோனா காரணமாக கிழக்கில் சுகாதாரப்பணிமனை யொன்று பூட்டப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments