ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் அவரது பிள்ளைக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை பாடசாலையை பூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டி.சந்திரராஜன் தெரிவித்தார்.
பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் செயற்படும் பொகவந்தலாவை ஆரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கும், அவரது பிள்ளைகள் இருவருக்குமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை கடந்த 28ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆயிரத்து 500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
இதனால், குறித்த பாடசாலையின் அதிபர் உட்பட 76 ஆசிரியர்களையும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய 100 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஆசிரியை நெருங்கிப் பழகிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நாளை பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தை தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு உட்பிரவேசிக்கக் கூடாது என அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.
0 Comments