Home » » தாலியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடித்த கணவன் உட்பட ஐவர் வைத்தியசாலையில்

தாலியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடித்த கணவன் உட்பட ஐவர் வைத்தியசாலையில்

 


வி.சுகிர்தகுமார்)

தாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் மனைவி பிள்ளை மற்றும் தாலியினை பறித்தெடுத்த திருடன் வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் விபத்துக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாமம் பிரதான வீதியில் பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நேற்றிரவு(02) நடைபெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உட்பட நான்கு வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குடும்பமானது பனங்காடு பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளின் பின்புறமாக இருந்த பெண்ணின் தாலியினை மோட்டார் சைக்கிளில் வந்த திருடன் பறித்து தப்பிச் செல்ல முயன்றுள்ளான்.

இந்நிலையில் திருடனை பின்தொடர்ந்த பெண்ணின் கணவன் சாகாமம் பிரதான வீதியில் பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இடைமறிக்க முற்பட்டுள்ளார். இதன்போதே இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மோதிய நிலையில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடனும் மோதுண்டுள்ளது.

இதனால் ஐவரும் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மயக்க நிலையடைந்த கணவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் திருட முயற்சித்தவரும் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் குறித்த பெண்ணின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கான சிகிச்சையும் பிள்ளை மற்றும் ஆசிரியருக்கான சிகிச்சையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார் சம்பவத்தை கண்டறிந்து கொண்டதுடன் திருடனால் பறிக்கப்பட்டு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்ட தாலியினையும் பெற்றுக்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேநேரம் குறித்த திருடனின் மோட்டார் சைக்கிள் அருகே சிறிய கத்தி ஒன்றும் காணப்பட்டதுடன் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அன்மைக்காலமாக இதுபோன்ற வழிப்பறி கொள்ளை மக்கள் விழிப்புணர்வின்மை காரணமாக நடைபெறுவது அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பீதியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |