Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை!


 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி மற்றும் பிரசவ அறை போன்ற பிரிவில் கடமையாற்றிய வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 76 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தாதியொருவர் கடந்த 4 ஆம் திகதி அவரது சொந்த ஊரான கம்பஹாவுக்கு விடுமுறையில் சென்ற நிலையில் குறித்த தாதியருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து தாதி பணிபுரிந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி மற்றும் பிரசவ அறை போன்ற நடவடிக்கைகள் யாவும் நேற்று (13) தற்காலிகமாக முடக்கப்பட்டு அதனுடன் தொடர்புபட்ட வைத்திர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 76 பேருக்கான PCR பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று (14) வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த தாதியரின் கணவனின் சகோதரி பிறண்டிக் ஆடைத் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த நிலையில் அவரை பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தியபோது அவருக்கு கொரோனா தொற்றுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து அவரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பி.சிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் குறித்த தாதியருக்கு கொரோனா தொற்றியுள்ளமையும், கொரோனா தொற்று சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்.

இதனையடுத்து தாதி பணிபுரிந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியின் பிரசவ அறையின் நடவடிக்கைகள் நேற்றைய தினம் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தமையும், அவருடன் தொடர்புபட்டவர்களை பி.சி.ஆர் பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது இன்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments