நூருல் ஹுதா உமர்அரசியல் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களே மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக முனைகிறார்கள். இவ்வாறான தேவையற்ற கைதுகளை உடன் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இடம்பெயர்ந்த மக்களை பஸ்கள் மூலமாக வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு கொண்டு சென்றதே குற்றம் என சாட்டப்பட்டுள்ளது. இதனை முறையாக, நேர்மையாக செய்தபோதும் வீண்பழி சுமத்தி, பழிதீர்க்கும் அரசியல் நாடகமாக தற்போது கைது செய்வதானது பெரும் வேடிக்கையாக உள்ளது.
சிறுபான்மை சமூகத்தின் குரலை நசுக்கும் செயலாகவும் இந்த கைது விவகாரத்தை நாம் பார்க்கிறோம். ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ விடுங்கள். சிறுபான்மை சமூகத்தின் நிம்மதியை சீர்குலைத்து மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எந்தவித குற்றங்கள் இருப்பினும் நீதியானதும் நேர்மையானதுமான விசாரனைகளை நடத்துங்கள். சிறைப்படுத்திவிட்டுத்தான் விசாரணை நடாத்துவோம் என்பது எமது சமூகத்துக்கும் பெரும் மனவேதனையை ஏற்படுத்தும்.
அவர் மூவின சமூகமும் ஒற்றுமைப்படவேண்டும் எனவும் சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் நினைப்பவர், ஒற்றுமையை வலியுறுத்தியே தனது அரசியல் அதிகாரத்தை காலம் காலமாக கொண்டு சென்றவர். இவ்வாறான தேவையற்ற வீணாண கைதுகளை நிறுத்த வேண்டும். தேவையற்ற கைதுகளால் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முனைவதும் காலத்திற்கு பொறுத்தமல்ல.
சிறந்த தலைமைத்துவம் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் நேசிக்கும் இவ்வாறான தலைமையை கைது செய்வதை நிறுத்தி, நிம்மதியாக வாழ வழிவிடுங்கள்" என்றார்
0 Comments