பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதே திணைக்களத்தின் 13 அதிகாரிகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த வழக்கு இன்று(28) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மீஹார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ், குறித்த சந்தேக நபர்கள் மாத்தறையில் இருந்து பலபிட்டிய வரை 130 கிலோ கிராம் ஹெரோஹின் போதை பொருளை கடத்திய 'மஞ்சு' என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2 கைத் துப்பாக்கிகளும், இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பிரிவால் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பிரதி சொலிசிட்டர் நாயகம் தெரிவித்தார்.
அதில் ஒரு துப்பாக்கி 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி இராணுவத்தால், யாழ். பாதுகாப்பு தலைமையகத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் மன்றில் குறிப்பிட்டார். பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி அஜித் பத்திரண, சந்தேக நபர்களை பிணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மேலதிக சமர்ப்பிப்புகளை முன்வைக்க அவசியம் என கூறினார்.
அதன்படி, வழக்குடன் தொடர்புடைய சமர்ப்பிப்புகளை ஒக்டோபர் 7 திகதி மன்றில் முன்வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர்களை இந்த மாதம் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மீஹார் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments