Home » » கப்பலின் தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு வருகை!

கப்பலின் தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு வருகை!



 



அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு நிபுணர்கள் குழுவொன்று வருகைதரவுள்ளது.


பத்து நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றே விசாரணை மேற்கொள்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை), குறித்த பகுதிக்கு வருகை தரவுள்ளது. கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் தலையீட்டால் பிரிட்டிஷ் மற்றும் டச்சு நிபுணர்களின் குழு இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், கப்பலை கடல் பகுதிக்கு கொண்டு செல்ல கல்முனையில் இருந்து ஒரு ஸ்பீட் படகு பயன்படுத்த கடற்படை திட்டமிட்டுள்ளது.

இலங்கை கடற்படையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக நேற்று பிற்பகல் முதல் மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளன. இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தூரத்தில் இந்த கப்பல் விபத்துக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் இலங்கை பாதுகாப்புத் தரப்பு, இந்திய தரப்புக்களின் தீவிர போராட்டத்துக்கு மத்தியில் தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் ALP Winger டக் என்ற படகு, விபத்துக்குள்ளான கப்பலை 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) வரை ஆழ்கடலுக்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளது. இதேவேளை, ஆழ்கடல் காற்று காரணமாக அவ்வப்போது தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளாவதாக தெரிவிக்கப்படுவதுடன் அவை டக் படகுகள் மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் இதற்காக ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான மூன்று மற்றும் மூன்று துரித தாக்குதல் கப்பல்கள், இலங்கை கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுவின் இராவணா மற்றும் வசம்ப டக் படகுகள், பாதிக்கப்பட்டுள்ள கப்பலின் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த ALP Winger டக் படகு, ஆழ்கடல் தீயணைப்பு வீரர்கள் கொண்ட டி.டி.டி-1 (TTT One) டக் படகு ஆகிய இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

அதேபோல், இலங்கை விமானப் படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர் மற்றும் பீச் கிராஃப்ட் ஆகியவை இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |