மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமாகிய கலாமதி தலைமையில் திங்கட்கிழமை 03.08.2020 மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேன கருத்து தெரிவிக்கையில் தேர்தலை சுமுகமாக நடாத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாக்களிப்பு இடம்பெறவுள்ள 428 வாக்குச் சாவடிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனிக்கப்பட்டு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக விசேடமாக இரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு பொலிஸ் காவலரண்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நெரிசலையும் இடைஞ்சலையும் குறைப்பதற்காக போக்குவரத்து மாற்றுப் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வீதித்தடை ஒழுங்குகள் லைட் சமிக்ஞைகள் என்பனவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
கூடவே வாக்கெண்ணும் நிலையங்களுக்கான மின்விளக்கு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக வீதித் தடைகள், நடமாடும் பொலிஸ் பிரிவுகள், மோட்டார் சைக்கிள் நடமாடும் பிரிவுகள் என்பன போன்ற ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விசேட கூட்டத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன், மட்டக்களப்புக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ், விசேட பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான சாமிக பிரேமஸ்ரீ ஏ.எம்.எம். நவாஸ் தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments