Home » » வெற்றியை கண்டு மகிழ தந்தை இல்லை - கண்கலங்கிய ஜீவன் தொண்டமான்

வெற்றியை கண்டு மகிழ தந்தை இல்லை - கண்கலங்கிய ஜீவன் தொண்டமான்

 

கிடைத்துள்ள பெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாதது பெரும் கவலையளிக்கிறதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

புதிய மலையகத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் எனக்கு பேராதரவை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் கொட்டகலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மக்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன். சொல்லில் அல்லாமல் எனது சேவைகளை செயலில் காட்டுவதற்கே விரும்புகின்றேன். எனக்கு கிடைத்த இந்த பெரு வெற்றியை மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.

நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றி வெற்றிபெற வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாக இருந்தது. தந்தையும் இதனையே கூறியிருந்தார். அந்தவகையில் இதனை கைப்பற்றி விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கின்றது.

தேர்தல் காலங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிறுபையன் என்று கூட என்னை தாக்கி பேசியிருந்தனர். ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து இளைஞர்களும், மக்களும் பேராதரவை வழங்கியுள்ளனர்.

நான் முதல் முதலில் பாராளுமன்றம் செல்கின்றேன். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொள்கை அடிப்படையிலேயே எமது அரசியல் பயணம் தொடர்கின்றது. கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு இடமில்லை. வெற்றியின் பங்காளியாக எமது மக்களும் மாறியுள்ளனர்.

இந்த பெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லை, ஆனால் எனது தந்தையை நேசித்த மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |