கொரோனா பரவல் தொடர்பாக சீன அரசுக்கு முன்னரேயே தெரியும் என பகீர் தகவலை தெரிவித்துள்ளார் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற பெண் விஞ்ஞானி.
ஹொங்கொங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான் (Li-Meng Yan) என்ற பெண் விஞ்ஞானியே மேற்படி தகவலை தெரிவித்தவராவார்.
பொக்ஸ் நியூஸூக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் தான் இருக்கும் இடத்தைப் பற்றி குறிப்பிடாமல் பேசியுள்ளார். அதில், ``கொரோனா தொடர்பாக உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தது. ஆனால், கொரோனா பரவலை அறிந்தும் சீன அரசு அதை வெளியில் சொல்லாமல் இருந்ததாகவே நான் நினைக்கிறேன்.
வைராலஜி துறையில் இருக்கும் எனது மேற்பார்வையாளர் மற்றும் அந்த துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், வைரஸ் தொடர்பான எனது ஆய்வை புறக்கணித்தனர். அப்போதே வைரஸ் பரவலில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
வைரஸ் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹொங்கொங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது. நானும் என்னுடைய துறை சார்ந்த நண்பர்களும் வைரஸ் தொடர்பாக விவாதித்தோம். ஆனால், வைரஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய பல மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் திடீரென மௌனம் காத்ததையும் காணாமல் போனதையும் எங்களால் உணர முடிந்தது.
அப்போதுதான் அங்கிருந்து வெளியேற முடிவு செய்து ஏப்ரல் 28-ம் திகதி கேத்தே பசுபிக் விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன். சீன அரசிடம் நான் பிடிபட்டால் மிகவும் மோசமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் அல்லது பிறரைப் போலவே நானும் காணாமல் போயிருப்பேன். நான் பிறந்த நாட்டில் உள்ள அரசு எனது பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறது. எனது வாழ்க்கை இன்னும் ஆபத்தில்தான் உள்ளது. இனி எப்போதும் என்னால் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போக முடியாது.
கோவிட் தொடர்பான செய்தியை உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமெரிக்கா வந்தேன்” என லி மெங் தெரிவித்துள்ளார்.
0 Comments