Advertisement

Responsive Advertisement

கல்லடி பாலத்தில் பரபரப்பு; பெண் நடுவீதியில் போராட்டம்

இன்று(24) மாலை 4.00 மணியளவில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தாயொருவர் கல்லடி பாலத்திற்கு அருகில் நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கல்லடி திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய குறித்த பெண்ணிற்கும், கூலித்தொழில் செய்து வரும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக ஏற்கனவே காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்து வழக்கு தொடர்ந்திருந்த போதும். இருவரும் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்ததால் அவர்களை காத்தான்குடி பொலிஸார் விடுவித்தனர்.

எனினும் இவர்களுக்கிடையேயான குடும்பதகராறு தொடர்ந்த வண்ணமே இருந்ததால் குறித்த பெண் தனது 7 வயது , 5 வயது மற்றும் ஒன்றரை வயது பிள்ளைகளுடன் கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள நடுவீதியில் அமர்ந்து, நீதிகோரியும், பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அவ்விடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் அவர்களை அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக காத்தான்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவிக்கையில்,

இவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிள்ளைகள் மூவரும் சிறுவர் நலன் காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments