உகந்தமலை முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரை இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் லௌகலை பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் நேற்று (22) திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்கான கொடியேற்றம் ஜூலை மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளது.
இதேவேளை ஆடிவேல் விழா உற்சவத்தின் தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும்.
இக்காலப்பகுதியில் திருவிழாவிற்குரிய உபயகாரர் சார்பில் 50 பேரளவில், அந்தந்த பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி சான்றிதழ்களுடன் ஆலயத்திற்கு வந்து தங்கி திருவிழாவில் பங்கேற்றமுடியும்.
ஏனையோர் பகலில் மட்டும் 50பேராக மட்டும் வந்து வணங்கி விட்டுச்செல்ல அனுமதிக்கப்படுவதுடன், இரவில் தங்க அனுமதிக்கப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டது
ஆலய சூழலில் கடைத்தெரு வைக்க முடியாது. சுகாதார விதிமுறைகளுக்கு இணங்கவே அனைத்தும் இடம்பெறும். என ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
கதிர்காமத்திற்கான பாதயாத்திரையும் தடை செய்யப்பட்டள்ளதால் காட்டுப்பாதையும் திறக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments