நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்காவின் பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி நடத்தும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக ஏழு அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் 11 இடைமனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதா இல்லையா என்பது தொடர்பான பரிசீலனை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியிருந்தன.
இதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாளான இன்றைய தினமும் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போதே ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்தே ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையிலும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாதென பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
0 comments: