ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்தமையினால் செலுத்த முடியாமல் போன, போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடும் இன்றி மே மாதம் 29ஆம் திகதி வரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மாஅதிபர், ரஞ்சித் ஆரியரத்ன இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான தண்டப்பணத்தை, மேலதிக தண்டப்பணம் அறவிடப்படாமல் செலுத்துவதற்கான கால எல்லை இதற்கு முன்னர் மே 02 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில், தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் இடம்பெற்றது.
ஆயினும் ஏப்ரல் 29 முதல் மே 04 ஆம் திகதி வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாலும், மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிரதேசங்களில், தபாலாகங்களில் அதனைச் செலுத்த வாய்ப்பு கிடைக்காமை காரணமாக மே 11ஆம் திகதி முதல் மே 29ஆம் திகதி வரையான காலப் பகுதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments: