ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றியிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவaர்கள் மிக அவதானத்தோடு செயற்படுமாறு பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் மேலும் தீவிரமாக பரவும் அச்சம் காணப்படுகின்ற நிலையில் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் நோயாளி ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இனங்காணப்பட்டார். அவர் சீனா நாட்டை சேர்ந்தவர். அதேவேளை முதலாவது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஸ்ரீலங்கா பிரஜை கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். இதனை தொடர்ந்து கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளிடம் இருந்து அவர்கள் நேரடி தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் யாழ்பாணம், பேருவளை, கொழும்பு உட்பட நாட்டின் 19 பகுதிகளில் கண்டறியப்பட்ட தொற்றாளிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள். ஆகவே இப்பிரதேச மக்கள் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களை நாடவும்.
இதுவரை கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவவில்லை என்பதை சுகாதார அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். கொரோனாவை தடுப்பதில் தேசிய புலனாய்வு பிரிவு முக்கிய பங்கு வகிக்கின்றது. நோய் தொற்றாளிகள் காணப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு படைகள் சுகாதார அதிகாரிகளுக்கு போலியான தகவல் வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments: