ஈராக்கில் கடந்த மாதம் அமெரிக்க இராணுவமும், ஈரான் ஆதரவு தீவிரவாதிகளும் மோதலில் ஈடுபட்டனர். அதனையடுத்து இம்மாதம் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் ஆத்திரத்துடன் தெரிவித்திருப்பதாவது,
ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாடு எதிர்பார்க்காத அளவு பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க பழடகள் மீதான ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியையடுத்தே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒருவேளை ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தால், அதற்கான மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என பகிரங்கமாக கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
அமெரிக்க படைத்தளங்கள் மீது வான்வெளித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட மறுநாள் ஹிஸ்புல்லா முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாத முகாம் மீது அமெரிக்க இராணுவமும் தாக்குதல் நடத்தியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல்களுக்கு முழுமுதற் காரணமாக , கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சொலைமனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானால் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் இலக்குவைக்கப் படுகின்றமையே என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
0 comments: