உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
எனினும் மக்கள் அதனை மதிக்காமல் ஊரடங்குச்சட்டத்தை மீறி நடமாடியே வருகின்றனர்.
இந்த நிலையில் துனிசியாவில் ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களை தடுப்பதற்காக ரோந்துப் பணியில் பொலிஸ் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
4 சக்கரங்கள் கொண்ட இந்த பொலிஸ் ரோபோக்கள் முக்கிய வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. வெறிச்சோடிய வீதிகளில் யாராவது நடந்து வந்தால் அவர்களை இந்த ரோபோக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும். ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தீர்கள்? உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்? என கேட்கும்.
உடனே அந்த நபர்கள் ரேபோவில் உள்ள கமரா முன்பு தங்கள் அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை காட்ட வேண்டும். இதன்மூலம் அதிகாரிகள் அவற்றை எளிதில் சரிபார்த்து தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க முடிகிறது.
தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து ஊரடங்கை மீறுவது தெரியவந்தால் பெலிசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். பொலிஸ் ரோபோ பணியில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
துனிசியாவில் ஊரடங்கு உத்தரவு இரண்டாவது வாரம் நீடிக்கிறது. மொத்தம் 436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: