யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடொன்று தீபற்றியெரிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அப்பகுதியில், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநகர் கொண்டடி வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளை அந்த வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து உடனடியாக மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினருடன் பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அந்த வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரும் தாயார் ஒருவரும் வசித்து வருகின்றனர். ஒரு சகோதரி அந்த வீட்டிற்கு வந்து செல்கின்றதாகவும், குடும்பத்தில் தினமும் சண்டைகள் நடப்பதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில், குடும்ப தகராற்றின் காரணமாக, வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அப்பகுதி கிராம சேவையாளர் சென்று பார்வையிட்டதுடன், தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வரை, அங்கேயே நின்றார்.
0 comments: