பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை அடுத்து லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் தற்போது கொரோனா பாதிப்புக்கு மையமாக மாறியுள்ளது.
இங்குள்ள மருத்துவமனைகள் மொத்தம் ஸ்தம்பித்துள்ள நிலையில், சவக்கிடங்குகளும் கல்லறைத் தோட்டங்களும் சடலங்களால் நிரம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட நாட்டின் 4 முக்கிய நகரங்களில் உள்ள ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் ஸ்தம்பித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு வேதனை தெரிவித்துள்ளனர்.
211 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில், தற்போது அரசு வெளியிட்டுள்ள கொரோனா இறப்பு எண்ணிக்கையும் இலக்கானவர்கள் எண்ணிக்கையையும் விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
போதுமான மருத்துவ வசதிகள் இன்மை, பரிசோதனைகள் முன்னெடுப்பதில் தோய்வு உள்ளிட்ட காரணங்களால் இது நேர்ந்திருக்கலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கொரோனா வெறும் காய்ச்சல் தான், இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து நாட்டு மக்களை பீதியில் தள்ள வேண்டாம் என ஜனாதிபதி Jair Bolsonaro கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே மனாஸ் நகரில் நாள் ஒன்றிற்கு 100 சடலங்கள் வரை புதைக்கும் நிலையில், கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகளவான சடலங்களை புதைப்பதில் அதிகாரிகள் தடுமாறுவதாக கூறப்படுகின்றது.
அரசு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பிரேசிலில் இதுவரை கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 53,000 கடந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,700 எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கைகளை விட பல மடங்கு கொரோனா இறப்புகள் நேர்ந்திருக்கலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கணிப்பு.
0 comments: