நூருல் ஹுதா உமர்.
அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மொத்த வியாபாரிகளுக்கான விலைக்கட்டுப்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டும் உயர்மட்ட கூட்டம் இன்று (8) காலை கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் கல்முனை மாநகர சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை அதிகாரிகள், கல்முனை மாநகரத்திற்கு உட்பட பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன் உட்பட சுகாதார துறை அதிகாரிகள் பொலிஸ், பாதுகாப்பு படை அதிகாரிகள், வர்த்தக சங்கங்களின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த கூட்டத்தில் நுகர்வோர் அதிகாரசபையினால் விதிக்கப்பட்ட விலைகளுக்கு அமைவாக பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், மொத்த வியாபாரிகளிடம் இருந்து பற்றுச்சீட்டு பெறாத எந்தவொரு சில்லறை வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்யமுடியாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் தங்களின் வியாபார தளங்களில் பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படல் வேண்டும் என்றும் நுகர்வோர் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களினால் மொத்த வியாபாரிகளுக்கு தெளிவூட்டல் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் அரசினால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலத்தில் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நிர்ணய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் குறிந்த வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் பதிவேற்றப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
0 comments: