அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிரமலநாதன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுராதபுரம் சிறைச்சாலையில் சனிக்கிழமை மாலை இடம் பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க நேற்று காலை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தேன்.
அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகருடன் கலந்துரையாடினேன்.
இதன் போது சிறைச்சாலையில் உள்ள 11 அரசியல் கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இதன் போது சிறைச்சாலையில் பாதுகாப்பு இல்லை என்றால் உடனடியாக மகசின் சிறைச்சாலைக்கோ அல்லது யாழ்பாணம் சிறைச்சாலைக்கோ குறித்த அரசியல் கைதிகளை மாற்றும் படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிரமலநாதன் கேட்டுக் கொண்டார்.
அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவும் பாரதூரமான நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் எனவும் சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
உலகம் பூராகவும் கொரோனா தொற்றின் காராணமாக சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
அரசாங்கம் சிறைக்கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். கைதிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று எற்படும் என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்.
உடனடியாக சிறைச்சாலை ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடி 11 அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை தொடர்பாக விளங்கப்படுத்தி அவர்களை யாழ்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யும் படி கேட்டுக் கொண்டார்.
இதன்போது உடனடியாக 11 தமிழ் அரசியல் கைதிகளையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிரமலநாதன் தெரிவித்தார்.
0 comments: