கல்விச் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (17) கல்வியமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையில் நீண்டகால தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்து அது தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள், கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அளகக்பெருமவை இன்று (17) சந்தித்தனர்.
இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர்களின் சேவையை மூடிய சேவைகளாக மாற்றுவது மற்றும் அச்சேவைகளுக்கு உரிய சம்பள கட்டமைப்பை மேற்கொள்வதற்கு அதிக காலம் எடுப்பதால், அதனை அமைச்சரவைக்கு வழங்கப்பட்ட இடைக்கால சம்பள முன்மொழிவை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் அமைச்சருடன் கலந்துரையாடியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் விசேட விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் தேசிய பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதில் குறிப்பாக கடந்த தேர்தலின் போது, முறைகேடுகள் குறித்து ஆராய நடவடிக்கை எடுத்துள்ளதாக, இது தொடர்பில் ஆசிரியர் சங்க பிரதிநிதகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் பாடசாலைகளில் பணம் அறவிடுதல், பாடசாலை ஆவண நடவடிக்கைகள், மற்றும் விண்ணப்பங்களை நிரப்புதல் போன்றவற்றின் காரணமாக ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்முறை தடைபட்டுள்ளதால் அவற்றிலிருந்து ஆசிரியர்களை தூரமாக்கி, கல்விசாரா ஊழியர்களை அதற்கு நியமித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர்களின் வெற்றிடங்களை நிரப்புதல் குறித்து இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கம், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கம், அதிபர் தொழில் வல்லுநர்கள் சங்கம், அகில இலங்கை ஆசிரியர் ஆலோசனை தொழிற்சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிற்சங்க பிரதிநிதிகள் கல்வி அமைச்சருடன் இது போன்ற உரையாடலுக்கான சந்தரப்பம் வழங்கியமைக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களின் தொழில்சார் கோரிக்கைகளுக்கு நீதியை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
தான் தனது அமைச்சை பொறுப்பேற்று சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதாகவும், இந்த விடயத்தை விரைவாக அறிந்து மிக விரைவில் உரிய தீர்வுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பேன் என அமைச்சர் கூறியதோடு, இறந்த காலத்தில் அல்லாது, நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்று அவ்வாறான முடிவுகள் தொடர்பில் முன்னிற்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தா உள்ளிட்ட அமைச்சின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments: