இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை உத்தியோகத்தர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்றைய (17) தினம் மட்டக்களப்பு சாலை உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெருந் தொகையான பயணிகள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
போக்குவரத்துச் சபை ஊழியர்களின் இப்பணிப் பகிஷ்கரிப்பால் பெருந்தொகையான பயணிகள், பஸ் தரிப்பு நிலையத்தில் நிறைந்து காணப்படுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம், தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தொடரவுள்ளதாக, போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலையிலிருந்து தினமும் நாட்டின் நாலா பாகங்களுக்கும் பஸ் சேவைகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: