Home » » நியமனம் பெற்ற அதிபர்களை நிரந்தரமாக உள்ளீர்க்க சிறீதரன் எம்.பி கோரிக்கை

நியமனம் பெற்ற அதிபர்களை நிரந்தரமாக உள்ளீர்க்க சிறீதரன் எம்.பி கோரிக்கை

மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் பெற்ற அதிபர்களை நிரந்தர அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளையின் போது பிரேரணை ஒன்றை கொண்டு வந்துள்ளார். இதன்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
அதாவது மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் பெற்ற அதிபர்களை நிரந்தர அதிபர் சேவைக்குள் உள்ளீர்த்தல்.
வடக்கு மாகாணத்தில் 2012.08.08ஆம் திகதி முதல் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் பெற்ற 148 அதிபர்கள் இன்று வரை நிரந்தர அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாமல் பழிவாங்கப்பட்டுள்ளார்கள்.

மிக நீண்டக் காலமாக போக்குவரத்து இடையூறுகள் நிலவிய போது பயணமே செய்யமுடியாத குறிப்பாக தரைவழிப் பாதைகளே இல்லாத நெடுந்தீவு, எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு போன்ற இடங்களிலும் வன்னியில் காட்டுப்பிரதேசங்கள் நிறைந்த போக்குவரத்துப் பாதைகளே அற்ற அதிகஷ்டமான பிரதேசங்களிலும் யுத்தம் நடந்த சூழ்நிலைகளிலெல்லாம் பலத்த எறிகணைகளுக்கும், பயங்கரமான தாக்குதல்களுக்கும் மத்தியில் தியாக மனப்பான்மையுடன் பல பாடசாலைகளை கட்டிவளர்த்து வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை உயர்த்துவதில் அதிகூடிய பங்களிப்புச் செய்த இவ் அதிபர்கள் இலங்கையின் கல்வித்துறை அகராதியிலேயே இல்லாத 'மிகை ஊழியர்' என்ற சொற்பதத்தின் அடிப்படையில் அதிபர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நியமனங்கள் வழங்கப்படும்போது நியமனம் தொடர்பான விரிவான விளக்கங்களோ, தெளிவுப்படுத்தல்களோ உரியவர்களால் வழங்கப்பட்டிருக்கவில்லை.
கடந்த காலங்களில் இந்த நாட்டிலே கடமை நிறைவேற்றும் அதிபர்கள் குறித்த காலத்தின் பின் எவ்வாறு நிரந்தர சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்களோ அதே அடிப்படையில், தாங்களும் அந்நியமனத்திற்குள் உள்வாங்கப்படுவோம் என்ற நம்பிக்கையை இந்த அதிபர்கள் கொண்டிருந்தார்கள்.

ஆனால், ஏறத்தாழ 08 ஆண்டுகள் நெருங்குகின்ற வேளையிலும் இவர்களது நியமனம் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நியமனம் பெற்றவர்களில் பலர் அதிபர் சேவையை அடைவதற்கான 2 வினைத்திறமை காண் தடைதாண்டல் பரீட்சைகளில் தோற்றி சித்தி பெற்றுள்ளார்கள் என்பதுடன், இன்னும் ஐந்து தொடக்கம் இருபது வருடங்கள் வரை சேவையாற்றக்கூடிய வயதெல்லையைக் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.
அதிபர் பதவிகளில் கடமைத் தழுவலை மேற்கொள்ளும் இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களை அதிபர் சேவைக்கு சேர்த்துக்கொள்வது தொடர்பிலான அவி/12/1101/530/035 ஆம் இலக்க 2012.08.08ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மமானத்திற்கு அமைவாகவும், கல்வி அமைச்சு செயலாளரின் நுனு/04/60/01/18 ஆம் இலக்க 2013.01.03ஆம் திகதி நியமனக் கடிதத்தின் அடிப்படையிலும் இன்றளவும் எந்தவிதமான வேதன ஏற்றங்களோ, பதவியுயர்வுகளோ வழங்கப்படாது வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறக்கூட முடியாதவாறு மனிதாபிமானமற்ற முறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மாணவர்களுக்கு கல்வியை வழங்கி எதிர்கால மனித மூலதனத்தை உருவாக்குகின்ற, பல பட்டங்கள் பெற்று உயர்ந்த கல்வியியலாளர்களாக தங்களை ஆக்கிக்கொண்ட இவ்வதிபர்கள் நியாயமற்று பாதிக்கப்படுவது இலங்கை கல்விக்கொள்கையை பாதிப்புக்குள்ளாக்குவதோடு, மனிதாபிமான அடிப்படையில் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே, தாங்கள் இவ்விடயத்தில் அதீதமான கவனம் செலுத்தி எதிர்கால சந்ததிக்கு ஏணிப் படிகளாக இருக்கின்ற இவ்வதிபர்கள் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் பெற்ற திகதியிலிருந்து அடுத்த பதவியுயர்வுக்கான காலத்தை தீர்மானித்து, இவர்கள் தோற்றியுள்ள தடை தாண்டல் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் கவனத்திலெடுத்து இவர்களும் இந்நாட்டிலே கௌரவமுள்ள மனிதர்களாக, மனச்சோர்வற்று தங்கள் கல்விப்
பணிகளை ஆற்றுவதற்கு ஏதுவாக இவ் அதிபர்களை நிரந்தர அதிபர் சேவைக்குள் மிக விரைவாக உள்ளீர்க்க வேண்டுமென்ற பிரேரணையை முன்வைக்கிறேன் என சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |