கொழும்பு கிங்ஷ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி தொடர்பான தகவலை, கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பயங்கரவாதியான மொஹமட் அஷான் முகமட் முவாராக் அல்லது அப்துல்லா என்ற சந்தேக நபர் சம்பவத்தன்று தானாகவே குண்டை வெடிக்கவைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என கோட்டை நீதவான் ரங்க திஷாநாயக்க இன்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து குண்டுதாரியின் தலை கண்டெடுக்கப்பட்டதுடன் அந்த தலையிலுள்ள மாதிரியுடன் குண்டு தாரியின் மகளான அபீவா அஷான் என்பவரின் இரத்த மாதிரி ஒத்துப்போவதாக தெரியவந்துள்ளது.
இந்த பரிசோதனைக்கு அமைவாக இந்த தலையானது சந்தேகிக்கப்பட்ட குண்டுதாரியினதுதான் என அரச இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினால் நீதிமன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பகுப்பாய்வுப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கைக்கு அமைவாக குண்டுதாரி சம்பவ இடத்தில் குண்டை வெடிக்க வைத்துத்தான் உயிரிழந்தார் என்று தீர்மானிப்பதாகவும் நீதவான் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த குண்டுதாரியின் வீட்டைப் பரிசோதித்த போது, அங்கு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த ஆவணங்களுக்கு அமைவாக 2 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டதாகவும் அவர்கள் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
இது வரையில் சந்தேகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த குற்றப்புலனாய்வுப் பொலிஸார், கைப்பற்றப்பட்ட தொலைபேசி விபரங்கள் மற்றும் கணினித் தகவல்களுக்கு அமைய தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை பாதுகாப்பாக வைக்குமாறு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த கோரிக்கையை ஏற்ற நீதவான் அதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்ததுடன் விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் 18ஆம் திகதியன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் கூறினார்.
0 comments: