கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களால் நாடே அல்லோலகல்லோலப்பட்டுள்ளது.
மிலேச்சத்தனமான குறித்த குண்டு வெடிப்பு தாக்குதலால் 359 அப்பாவி பொது மக்களின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்துடன் 400 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நாட்டில் அண்மைக்காலமாக தினம் தினம் இறப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக புதுவருடத்திற்கு பின்னர் விபத்துக்கள் மின்னல் தாக்குதல் என பல உயிர்கள் பலியாகியுள்ளன. இதனால் நாடே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் கடுமையான மழைப்பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
இதனுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டில் மின்னல் தாக்கத்தால் பலர் பலியாகியுள்ளதால் மின்னல் தாக்கத்திலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வகையில் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.
0 comments: