நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய பயங்கரவாதியை ஏப்ரல் 5-ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்ததாக ஆதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கொலையாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலையாளி ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது.
இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உறுதி செய்தார். இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், பிரென்டன் டாரன்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை பிரென்டனை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டனர்.
இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளியினர், இந்தியர்களும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது. நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் 9 பேரை காணவில்லை, என குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் அதிகமான தகவல்களை பெற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம், உறுதியாக தெரியாமல் எதையும் அறிவிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments: