இன்று வெளியாக உள்ள மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறித்த அறிக்கையானது இலங்கையின் யுத்தக்குற்றம் மற்றும் உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட மனிதவுரிமைகள் விடயத்தில் தாக்கம் செலுத்தக் கூடியதாக உள்ளது.
அத்துடன் இதில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எந்தக்காலத்தில் புதைக்கப்பட்டார்கள் போன்ற விடயங்களை அறிவதற்கு இந்த அறிக்கை முக்கியமானது எனக் கருதப்படுகிறது.
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள ஆய்வுகூடத்தில் காபன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளிவரும் என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த வளாகத்தில் இருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளிவரும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: