Home » » தமிழரின் இரத்தப் பண்ணையாக மாறிய கொக்கட்டிச்சோலை! இன்றும் நெஞ்சைவிட்டு ஆறாத வடு!

தமிழரின் இரத்தப் பண்ணையாக மாறிய கொக்கட்டிச்சோலை! இன்றும் நெஞ்சைவிட்டு ஆறாத வடு!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மகிழடித்தீவு சந்தியிலுள்ள நினைவுத்தூபிக்கு அஞ்சலி சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கொக்கட்டிச்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அப் படுகொலையில் உயிர் தப்பியவர்கள், பொது மக்கள் எனப் பெருந்தொகையானோர் இந்நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கிராமத்தின் மீது 28.01.1987 இல் சிறிலங்கா இராணுவத்தின் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கொண்டவெட்டுவான், களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கல்லடி ஆகிய இடங்களிலிருந்து கவசவாகனங்களுடன் முன்னேறிய இராணுவத்தினரும் குண்டுவீச்சு விமானங்களும் உலங்குவானூர்திகளும் மேலதிக உதவித் தாக்குதல்களை வழங்க கொக்கட்டிச்சோலை கிராமத்தினுள் நுழைந்த படையினர் அம்மக்களை மிகமோசமாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததுடன் படுகொலைகளையும் செய்தனர்.
இதில் குறிப்பாக அமெரிக்க நிதி உதவி கண்காணிப்புடன் மகிழடித்தீவு இறால் பண்ணை இயங்கி வந்தது. இங்கு பெருமளவு ஏழைமக்கள் வேலை செய்து வந்தனர். அங்கு வேலை செய்த நூற்று முப்பத்தைந்து பொதுமக்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்து இறால் பண்ணைக்குள்ளேயே போட்டதால் இறால் பண்ணை மனித உடல்களை கொண்ட இரத்தப் பண்ணைகளாக காட்சியழித்தது. அத்துடன் கொக்கட்டிச்சோலை அரிசியாலையில் தஞ்சமடைந்திருந்த இருபத்துநான்கு பேரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் 12 வயது நிரம்பிய 7 சிறுவர்களும் உள்ளடங்குவார்கள். இதில் குறிப்பாக பன்னிரண்டு வயது தொடக்கம் நாற்பது வயதிற்குட்பட்ட இருநூறிற்கு மேற்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டு சித்திரவதைகளின் பின் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் பலர் படுகாயப்படுத்தப்பட்டனர்.
மேலும் அம்பிலாந்துறை என்ற கிராமத்தில் நாற்பத்தைந்து பொதுமக்களை கொன்ற இராணுவத்தினர் அவர்களின் உடல்களை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் உட்பட பல தொடர் படுகொலைச் சம்பவங்கள் 28,29,30 ஆகிய மூன்று நாட்களிற்குள்ளும் கொக்கட்டிச் சோலையிலும் அதன் அயல் கிராமங்களிலும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கதாகும்.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |