Home » » மட்டக்களப்பில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது

மட்டக்களப்பில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது


மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு முதலாவது சிவில் விமானம் இன்று (27) வருகை தந்தது.

மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டதையடுத்து பயணிகளை ஏற்றிய முதலாவது சிவில் விமானம் இன்று (27) செவ்வாய்க்கிழமை இரத்மனாலை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.15 மணிக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்ததடைந்தது.

'பிளை சதர்ன்' (Fly Southern) எனப்படும் இந்த சிவில் விமானத்தில் முதலாவதாக வருகை தந்த பயணிகளை மட்டக்களப்பு விமான நிலைய ஊழியர்கள் மலர்களை வழங்கி வரவேற்றனர்.

இதன் போது மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக்க பொன்சேகா மற்றும் 'பிளை சதர்ன்' விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சமித்த அபேசிங்க உட்பட மட்டக்களப்பு விமான நிலைய ஊழியர்கள் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து முதல் கட்டமாக 'பிளை சதர்ன்' உள்ளுர் சிவில் விமானம் வாரத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டக்களப்புக்கும் கொழும்பு இரத்மனாலை விமான நிலையத்திற்குமிடையில் சேவையில் ஈடுபடும் என மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக்க பொன்சேகா தெரிவித்தார்.

இந்த விமானம் மேற்படி தினங்களில் காலை 9.00 மணிக்கு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடையும். பின்னர் மட்டக்களப்பிலிருந்து மாலை 4.00 மணிக்கு புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை சென்றடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரயாணிகளின் தொகைக்கு ஏற்ப ஏனைய விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புக்கும் - இரத்மலனை விமான நிலையத்திற்குமிடையில் ஒரு வழிக்கட்டணமாக 100 டொலர் அறவிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |