மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை குறைக்ககோரியும் ஆரையம்பதியில் உள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை காiலை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் மகளிர் அமைப்புகள்,அரசியல்கட்சிகளின் உறுப்பினர்கள்,ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
யுத்ததிற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபானசாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மட்டுப்படுத்த உhயி அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
ஆரையம்பதி பகுதியில் இரண்டு மதுபானசாலைகள் சட்ட விரோதமான முறையில் இயங்கிவருவதாகவும் அதற்கு எதிராக 2015 ஆம் ஆண்டில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்துவருகையில் அதனையும் மீறி சில அதிகாரிகளின் அனுசரணையுடன் அந்த மதுபானசாலைகள் இயங்கிவருவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
2018ஆம் ஆண்டுகுறித்த மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படக்கூடாது என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் அதனை மீறி அனுமதி வழங்கப்பட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மதுபாவனைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருவதுடன் வறுமை நிலையும் அதிகரித்துள்ளதுடன் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மதுவினால் குடும்பங்களை பிரிக்காதே,சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டு,சட்டவிரோத மதுபானசாலைகளை அகற்று,மதுவினால் மக்களை நோயாளியாக்காதே,மதுவினை நிறுத்து விபத்துகள் குறையும் போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,ஐக்கிய தேசிய கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி மீனா கேதிஸ்வரன் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டர்.
கவன ஈர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஆரையம்பதியில் இயங்கிவரும் மதுபான விற்பனை நிலையம் தொடர்பில் இலங்கை மதுவரித்திணைக்கள உயர் அதிகாரிகள் இன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.








0 Comments