Home » » மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த கே.அருட்பிரகாசம் அவர்கள் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளராக நியமனம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த கே.அருட்பிரகாசம் அவர்கள் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளராக நியமனம்

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பரிபாலனத்தின் கீழுள்ள மண்முனை வடக்கு கோட்டத்திற்கான கோட்டக்கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார். 2017. 10.25 திகதி முதல் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளாராக கடமையாற்றும்படி  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G.திசாநாயக்க அவர்களினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கடமையை 30.10.2017 திகதியன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளாராக இருந்த ஏ.சுகுமாரன் கடந்த 4.8.2017 திகதியன்று கல்விச்சேவையிலிருந்தும், கோட்டக்கல்விப்பாளர் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றதையடுத்து சுமார் இரண்டுமாதமாக இவ் வெற்றிடம் நிலவியது. இதனைத் தொடர்ந்து மண்முனை வடக்கு கோட்டத்திற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படாத காரணத்தால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இதனை துரிதகவனம் எடுத்து நேர்முகத் தேர்வை நடாத்தி கோட்டக்கல்விப்பணிப்பாளராக அதிபர் சேவைத்தரம் 1ச்சேர்ந்தவரும், மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபருமான  கே.அருட்பிரகாசம் அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நகரத்தை வசிப்பிடமாக கொண்ட கே.அருட்பிரகாசம் அவர்கள் 1978.11.7 திகதி ஆசிரியசேவையில் நியமனம் பெற்று வவுனியா கோமரசன்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் ஆசிரியராக முதன்முதலில் கடமையாற்றினார். அதன்பின்பு கல்வியமைச்சின் அதிபர்சேவைப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து 1991 முதல் 2017.10.25 வரையும் அதிபராக பல பாடசாலைகளிலும், இறுதியாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் ஆசிரியராக, தொலைக்கல்வி ஆசிரியப் பயிற்ச்சிநெறி போதனாசிரியராகவும், குருக்கள்மடம் ஸ்ரீமுருகன் ஆலய பரிபாலன சபைச்செயலாளராகவும் இருந்து பல கல்விப்பணி, சமூக சமய கலாச்சார பண்பாட்டுப் சேவைகளை சமூகத்திற்கும், மற்றவர்களின் எண்ணத்திற்கும் ஏற்றாற்போல் செய்துகாட்டிய செயல்வீரர் ஆவார்.

அதிபர் என்ற கர்வமில்லாமலும், தன்னலம் கருதாமலும், பிறர்நலன் கருதியும், அலுவலகத்திறன், முகாமைத்துவம்,நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்றி பாடசாலைகளிலும்,ஆலயங்களிலும் நல்ல பலவிடயங்களை செய்து தான் செய்த வேலைகளில் வெற்றிகண்டவர்.சக அதிபர்களுடனும், ஆசிரியர்களுடனும் அன்பாகவும், ஒழுக்கமாகவும் பழகும் மதிநுட்பமிக்க அதிபராவார். இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில்தான் க.பொ. உயர்தர மாணவர்களின் நன்மை கருதி தொழிநுட்ப பிரிவை ஆரம்பித்து வைத்தவர் ஆவார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |