மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில் உபவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கத்தை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்றைய தினம் (14) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு 5 அம்சக் கோரிக்கைகளுடன் அக்கட்டடத் தொகுதியினுள்ளேயே இன்று வரையும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக காவலாளிகளைத் தாக்கி அவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 19 பேருக்கு எதிராக எறாவூர் பொலிஸ் நிலையம் மூலம் வழக்குத் தொடரப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டவர்கள் கடந்த 11ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரானதையடுத்து அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டதுடன், முற்றுகையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் அத்துடன், திங்கட்கிழமை (14) அன்று மட்டக்களப்பு நீதிமன்றுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், மாணவர்களது கோரிக்கைகள் குறித்து, தற்போது வரை வெளியேறாத மாணவர்கள், இன்றைய தினம் மன்றில் ஆஜராகி தமக்கான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து ஏனைய மாணவர்களுடன் கலந்துரையாடும் படியும் உபவேந்தர் நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் ஆஜராக வேண்டும் என்றும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments