Home » » குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - மேஷம் மற்றும் ரிஷபம்

குருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை - மேஷம் மற்றும் ரிஷபம்

மேஷம்:
அஸ்வினி 55% பரணி 70% கிருத்திகை 1ம் பாதம் 60%
எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றித் தந்த குருபகவான் 02.8.2016 முதல் 1.09.2017 வரை 6-ம் இடத்தில் அமர்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து வீட்டில் நடந்தேறும். பிரபலங்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டு விசா வந்து சேரும்.
குருபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு. ஆனால் குரு ,6-ம் வீட்டில் மறைவதால் வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்னை, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். மற்றவர்களுக்கு பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள்.
02.8.2016 முதல் 19.9.2016 வரை சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் குழந்தை பாக்கியம் கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 காலகட்டத்தில் வீடுமாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
தாயாரின் ஆரோக்கியம் சீராகும். கடனில் ஒருபகுதியை திரும்பத் தருவதற்கு வழிபிறக்கும். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் அழகு, ஆரோக்கியம் கூடும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் 7-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால் உங்களுடைய உழைப்பிற்கும், நீங்கள் சிந்திய வியர்வைக்கும் அங்கீகாரம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் சகோதர வகையில் அலைச்சல், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், எதிலும் நிம்மதியின்மை, வழக்கால் நெருக்கடிகள் வந்துச் செல்லும்.
இந்த குருமாற்றம் திட்டமிடுதலும், முன்னெச்சரிக்கை உணர்வும் தேவை என்பதை உணர வைக்கும்.
ரிஷபம்
கிருத்திகை 2,3,4ம் பாதம் 70% ரோகிணி 77% மிருகசீரிஷம் 1,2 ம் பாதம் 85%
எப்போதும் நேர்பாதையில் செல்பவர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு நாலாவிதத்திலும் பாடாய்படுத்திய குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை 5-ம் வீட்டில் நுழைவதால் இனி புதிய சகாப்தம் படைப்பீர்கள். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் எதையும் சாதிப்பீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை, பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். தந்தையார் உதவிகரமாக இருப்பர். உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் பங்குவர்த்தகம் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய பதவி, பொறுப்புகளுக்கு ்தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
வேலை நியமன உத்தரவுக்காக காத்திருந்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். 02.8.2016 முதல் 19.9.2016 வரை உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் பயணிப்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். அரசாங்கத்தால் ஆதாயமடைவீர்கள். 20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்கள் ரசனை மாறும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாடு சென்று வருவீர்கள். 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய கடன் பிரச்சினை தீரும். ஆனால் 17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால் குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் ஈகோப் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை ஏற்படும்.
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால் வீண் செலவினங்கள், பதற்றம் வந்து போகும். விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். குரு 5-ல் நுழைவதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு எதிர்பார்த்தபடி உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சலுகைத் திட்டங்களை அறிமுகம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையில் உங்கள் உழைப்பையும், நல்ல மனதையும், சக ஊழியர்கள் புரிந்துக் கொள்வார்கள். பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |