Home » » காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன?- யோகேஸ்வரன்

காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன?- யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 3,270 பேர் காணாமல் போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் அ.த.க. பாடசாலையின் அதிபர் கந்தலிங்கம் சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் கடந்தகால அசாதாரண சூழ்நிலையால் எமது உறவுகள் பலரை இழந்து, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவல்களும் கிடைக்காமல் தினமும் வேதனையுடன் வாழ்கின்றனர்.
1983ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 1,552 பேர் காணாமல் போயுள்ளார்கள், அவர்களை இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுக்களுமே கடத்திச் சென்றுள்ளதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.
1987இல் இந்திய இராணுவத்தினரால் 165 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1,560 பேர் காணாமல் போயுள்ளனர்.
இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் சிலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை அறியாத நிலையில் அவர்களது உறவினர்கள் அலைந்து திரிகின்றார்கள்.
யுத்தத்தின் பின்னர் 130க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள்.
அவர்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது, யாரெல்லாம் பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள் என காணாமல் போனவர்களது உறவினர்கள் சாட்சியமளித்துள்ளார்கள்.
இதுவரை இந்த விடயங்கள் தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விசாரணைகள் மீது எமது உறவுகள் நம்பிக்கை இழந்துள்ளனர்' என அவர் இதன்போது, தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |